
தேவையானவை
வெள்ளை சோளம் - 50 கிராம்
வறுத்த வேர்க்கடலை- 15 கிராம்
கடுகு - 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம்- 8
பச்சை மிளகாய்- 1
கறிவேப்பிலை- சிறிதளவு
எண்ணை- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை
வாணலியை அடுப்பில் வைத்து, சோளத்தைப் பொன்னிறமாக வறுக்கவும். ஆறியதும் மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வேர்க்கடலை ஆகியவற்றைப் போட்டு, பொன்னிறமாக ஆகும்வரை வதக்கவும்.
வதக்கிய பொருட்களுடன் 1 டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் சோளத்தைப் போட்டுக் கிளறி, உப்புமா பதம் வந்ததும் இறக்கவும்.
தேவைப்பட்டால் பீன்ஸ், கேரட் மற்றும் முட்டைக்கோசை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
ஊட்டச்சத்து விவரங்கள்
பெரும்பாலும் வழக்கத்தில் இல்லாத ஒரு தானியத்தை, வளரும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் உணவு இது. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், எளிதில் ஜீரணிக்கும்; குழந்தைகளின் மலச்சிக்கலைப் போக்கும். உடலுக்குத் தேவையான அளவு கலோரி மற்றும் புரதம் நிறைந்தது. பி&காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் வாய்ப்புண் ஏற்படாமல் பாதுகாக்கும். இதை காலை அல்லது இரவு உணவாக 5 வயது முதல் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.


